நம்மில் பலர் பணத்தை சம்பாதித்தாலும் , அதை எப்படிக் கையாள வேண்டும், எங்கே முதலீடு செய்ய வேண்டும் போன்ற குழப்பங்களை கொண்டிருக்கிறோம். "கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படிப் பெருக்குவது?" என்ற கேள்வி நம் மனதில் ஒரு முறையாவது தோன்றி இருக்கும். ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கும், எங்கே தொடங்குவது என்ற தயக்கம் உள்ளவர்களுக்குமான கட்டுரை இது

முதலீடு என்றால் என்ன?

முதலீடு (Investment) என்பது உங்கள் பணத்தை எதிர்காலத்தில் மேலும் பணம் ஈட்டும் நோக்குடன் ஒரு சொத்து அல்லது திட்டத்தில் போடுவதாகும். உதாரணமாக, வங்கி வைப்பு, பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவை முதலீடுகள்தான்.

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

நீங்கள் முதலீடு செய்வதன் முக்கிய காரணம், பணவீக்கம் (inflation) - உங்கள் பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைப்பதைத் தடுப்பதுதான். இன்று 100 ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பொருளை, ஒரு வருடம் கழித்து அதே 100 ரூபாய்க்கு வாங்க முடியாது. உங்கள் பணம் வளரவில்லை என்றால், காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்துவிடும். அதனால், எதிர்கால தேவைகளுக்கு உங்கள் பணம் போதுமானதாக இருக்க முதலீடு அவசியம்.

எ.கா: 10 ஆண்டுகளுக்கு முன் தேநீரின்(Tea) விலை ரூ.5 என்று வைத்துக்கொள்வோம். இன்று அதே தேநீரின் விலை குறைந்தது ரூ.10.

ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கான சிறந்த வழிகள் (Beginners) :

1. வங்கி சேமிப்பு கணக்குகள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD)

  • இது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிமையான முதலீட்டு முறையாகும். வங்கியில் உங்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (ஃபிக்ஸட் டெபாசிட்) வைப்பதன் மூலம், உங்களுக்கு நிலையான வட்டி வருமானம் கிடைக்கும். 
  • இது பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், அவசரகால நிதியை (Emergency Fund) உருவாக்கவும் ஏற்றது. இருப்பினும், இதன் வருமானம் பணவீக்கத்தை விட குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

2. மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds)

  • மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஊடுறவு நிதிகள் என்பது, பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து, அதை பங்குகள், கடன் பத்திரங்கள் அல்லது பிற சொத்துக்களில் முதலீடு செய்யும் ஒரு நிதி நிறுவனம். ஒரு நிபுணர் (ஃபண்ட் மேனேஜர்) உங்கள் பணத்தை நிர்வகிப்பார். 
  • மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP (Systematic Investment Plan) முறை மிகவும் பிரபலமானது. இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யலாம். இது ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது, ஏனெனில் இது ஆபத்தை குறைக்கிறது.

3. தங்க முதலீடு

தங்கம் பலநூறு ஆண்டுகளாக தமிழர்களுக்கு முதன்மையான முதலீடாக உள்ளது. நீங்கள் அதை பயன்படுத்தும் வடிவத்தில் (நகைகள், நாணயங்கள்) அல்லது டிஜிட்டல் தங்கமாக, தங்கப் பத்திரங்களாக (Sovereign Gold Bonds) முதலீடு செய்யலாம். தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக ஒரு நல்ல பாதுகாப்பாக கருதப்படுகிறது. டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்கள் பாதுகாப்பானவை, மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இல்லை.

4. அரசுப் பத்திரங்கள் / திட்டங்கள் (PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா)

அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை. பொது வருங்கால வைப்பு நிதி (PPF - Public Provident Fund) ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும், இது வரி சலுகைகளையும் வழங்குகிறது. பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) போன்ற திட்டங்களும் உள்ளன, இவை நல்ல வட்டி விகிதங்களையும் வரிச் சலுகைகளையும் வழங்குகின்றன.

முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  • உங்கள் இலக்குகளை தீர்மானிக்கவும்: நீங்கள் எதற்காக முதலீடு செய்கிறீர்கள் (வீடு, படிப்பு, ஓய்வூதியம்)? உங்கள் இலக்குகளின் அடிப்படையில் முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஆபத்து பொறுப்பு (Risk Appetite): நீங்கள் எவ்வளவு ஆபத்தை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள்? அதிக வருமானம் பொதுவாக அதிக ஆபத்துடன் வரும்.
  • நிதித் திட்டம்: உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்புத் திட்டத்தைப் பட்டியலிடுங்கள். இது முதலீட்டுக்கு எவ்வளவு பணம் ஒதுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க உதவும்.
  • ஆராய்ச்சி: முதலீடு செய்வதற்கு முன், ஒவ்வொரு முதலீட்டு வழிமுறையையும் பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்யுங்கள்.

முதலீடு என்பது ஒரு பயணம், ஒரு பந்தயம் அல்ல. நீங்கள் ஒரு சிறிய தொகையுடன் தொடங்கலாம். பொறுமை, தொடர்ச்சியான முதலீடு மற்றும் அடிப்படை அறிவுடன், உங்கள் நிதி இலக்குகளை அடைய முடியும். இப்போதே தொடங்கி, உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள்!